இலங்கை அணியின் தோல்விக்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட குசல் மெண்டிஸ்: “எடுத்த தீர்மானங்களுக்கு நாமே பொறுப்பு என தெரிவித்த மஹேல ஜயவர்தன, தவறு இருப்பின் அதனையும் பொறுப்பேற்க தயாராக உள்ளோம்.“
கிரிக்கெட்டை நேசிக்கும் நாட்டு மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி வீரர்களுடன் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலோ அல்லது வெளிப்புற தாக்கமோ ஏற்படவில்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பலவீனம் காரணமாக, தான் வெல்லக்கூடிய பல போட்டிகளில் தோல்வியடைய நேர்ந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி தொடர்பில் தற்போது நடந்து வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய மஹேல ஜயவர்தன, போட்டி முடிந்த விதம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
அணியினர் திருத்திக்கொள்ள வேண்டிய தவறுகள் இருப்பதாகவும் புள்ளிகளைப் பெறுவதற்கான பல வாய்ப்புகளை அவர்கள் தவறவிட்டதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
எங்களுடைய திட்டம் மற்றும் வீரர்களின் திறமையின் அடிப்படையிலேயே கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் எடுத்த தீர்மானங்களுக்கு நாமே பொறுப்பு என தெரிவித்த மஹேல ஜயவர்தன, தவறு இருப்பின் அதனையும் பொறுப்பேற்க தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.