டயானா கமகே மீது பாராளுமன்ற வாளாகத்தில் தாக்குதல்? விசேட விசாரணை குழு நியமனம்: விசாரணைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச, கயந்த கருணாதிலக்க, இமித்யாஸ் பாக்கீர் மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் கீழ்தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து பிரதமரின் கோரிக்கையின் பிரகாரம் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான விசாரணைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச, கயந்த கருணாதிலக்க, இமித்யாஸ் பாக்கீர் மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்றைய(20) தினம் பாராளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நடந்து கொண்ட விதம் மற்றும் அவர் தன்னிச்சையாகக் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரால் இரண்டு கடிதங்கள் சபாநாயகரினது பணிக்குழாமிடம் கையளிக்கப்பட்டன.
இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவும் பிரசன்னமாகியிருந்தார்.