முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பம்: நிலத்தடி குடி தண்ணீர்க் குழாய்களைப் பொருத்துவதற்காக வீதியோரம் குழி தோண்டப்பட்ட போது இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரி, தடய வைத்திய நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு உட்பட ஏனைய நிபுணர்களை இந்த சந்தர்ப்பத்தில் கலந்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மத்திய கொக்குத்தொடுவாய் பகுதியில் நிலத்தடி குடி தண்ணீர்க் குழாய்களைப் பொருத்துவதற்காக வீதியோரம் குழி தோண்டப்பட்ட போது இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் அந்த இடத்தை அடையாளப்படுத்தி கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜா அந்த இடத்தை அவதானித்ததாகவும், அங்கு எலும்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறித்த காணியை பாதுகாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பாரிய புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்திலிருந்து கடந்த 29ஆம் திகதி பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடைகளும் எலும்பு உள்ளிட்ட மனித எச்சங்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து , போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களும், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உறவினர்களும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜா அந்த பகுதியை அவதானித்த நிலையில் அங்கு எலும்புகள் காணப்படுவதாகவும் குறித்த காணியை பாதுகாக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
பாரிய புதைகுழி என சந்தேகிக்கப்படும் இந்த இடத்திலிருந்து கடந்த 29ஆம் திகதி பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடைகளும் எலும்பு உள்ளிட்ட மனித எச்சங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
30 ஆண்டுகளான உள்நாட்டு போரின் பாரிய வடுக்களை இன்றும் முல்லைத்தீவு சுமந்து வருவதை நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி தொடர்பான தகவல்கள் கடந்தக் காலங்களில் வெளியாகி உலகையே உலுக்கியிருந்தது.
அதுபோல இலங்கையின் மன்னார், மாத்தளை மாவட்டங்கள் என மொத்தமாக 20 இடங்களில் மனித புதைக்குழிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும், கடந்த 30 வருடங்களில் மாத்திரம் 20 சமூக மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சமூக மனிதப் புதைகுழிகள் தொடர்பான சகல ஆவணங்களையும் அழித்துவிடுமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், இவ்வாறான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உறவினர்களும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், இறுதி யுத்தத்தின் போது மாத்திரம் சுமார் 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.