நியூசிலாந்து வீரர்களால் ஜொலிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்: கவனத்தை ஈர்த்துள்ள ரச்சின் ரவீந்திரா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் திகதி கோலாகலமாக தொடங்கவுள்ளது. வழக்கம்போல் அனைவரது பார்வையும் ஐந்து முறை கிண்ணம் வென்ற மகேந்திர சிங் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மேல் தான் உள்ளது.
கடந்த ஆண்டு கிண்ணத்தை வென்ற சூப்பர் கிங்ஸ் இம்முறையும் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது.
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் போட்டியில் இருந்து விலகி இருந்தாலும் நியூசிலாந்து வீரர்களின் வருகையால் சென்னை கூடுதல் பலம் பெற்றுள்ளது.
சென்னை ஆடுகளத்திற்கு ஏற்றவகையில் ஆடக்கூடியவர்கள் நியூசிலாந்தின் டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்செல். இது சென்னை அணிக்கு மேலும் பலத்தைக் கூட்டியுள்ளது.
இவர்கள் மூவரும் அண்மையில் இந்தியாவில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் சென்னையில் விளையாடுவதை காண ரசிகர்கள் ஆவர்வமாக உள்ளனர். இவரது துடுப்பாட்டம் பல அணிகளுக்கு மிரட்டலாக இருந்தது. அதனால் அவர்மீதான எதிர்ப்பார்ப்பு இம்முறை உச்சத்தில் உள்ளது.
சுழற்பந்து வீச்சிலும் அசத்தக் கூடிய ரச்சின் ரவீந்திரா சென்னை அணிக்கு இறுதிக்கட்டத்தில் பலமாக இருப்பார் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 22ஆம் திகதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேப்பாக்கத்தில் எதிர்த்து விளையாடவுள்ளது.