இலங்கை - பங்களாதேஷ் மோதும் இறுதிப்போட்டி நாளை ; ஹசனுக்கு பதில் முஸ்தபிசுர்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...
இலங்கை - பங்களாதேஷ் மோதும் இறுதிப்போட்டி நாளை ; ஹசனுக்கு பதில் முஸ்தபிசுர்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி அனைத்து கிரிக்கெட் இரசிகர்களினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் (Tanzim Hasan Sakib) நாளைய போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக முஸ்தபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ISPL T10- வெற்றிக் கோப்பையை உச்சிமுகர்ந்த கொல்கத்தா
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற சினிமா நட்சத்திரங்களின் புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமானது. சென்னை சிங்கம்ஸ் (சூர்யா), மஜ்ஹி மும்பை (அமிதாப் பச்சன்), ஸ்ரீநகர் கே வீர் (அக்ஷய் குமார்), பெங்களூரு ஸ்டிக்கர்ஸ் (ஹிருத்திக் ரோஷன்), ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத் (ராம் சரண்), டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா (சாயிஃப் அலிகான்) உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன. மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது. இதில் டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணி வெற்றிப்பெற்று மகுடம் சூடியது.
அஷ்வினுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கி பாராட்டு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில், அஷ்வினுக்கு ரூ.1 கோடி பரிசும், தங்க நாணயங்கள் மூலம் 500 என வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசும், செங்கோலும் வழங்கி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கௌரவித்தது.
ஐசிசி உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி - இலங்கையில்
2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகள் குறித்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பந்து வீச்சாளர்களுக்கு செக் வைத்த ஐசிசி - ஸ்டொப் குளொக் விதி கட்டாயமாக்கப்பட்டது
டி 20, ODI கிரிகெட்டுக்களில் ஸ்டொப் குளொக் விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. குறித்த விதியின் படி ஒரு ஓவருக்கு பின் அடுத்த ஓவரை வீசுபவர் 60 நொடிகளுக்குள் பந்து வீச தொடங்க வேண்டும். இரண்டு முறை எச்சரித்த பிறகும் இது தொடருமானால் ஒவ்வொரு கால தாமதத்துக்கும் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.