புலிகளின் காலத்தில் பெண்களும், சிறுவர்களும் பாதுகாப்பாக வாழ்ந்தனர்: நாடாளுமன்றில் சார்ள்ஸ் புகழாரம்

OruvanOruvan

Charles Nirmalanathan

தென்னிலங்கை ஆட்சியாளர்களினால் தமிழனத்தை அழிப்பதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் உலகெங்கும் தமிழ்மொழி பரந்துவிரிந்து வளர்ந்து வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய சாள்ஸ் நிர்மலநாதன்,

‘‘இலங்கை சுதந்திரம் அடைந்து 76 வருடங்கள் கடந்துள்ள போதிலும் சரியான பொருளாதார கொள்கை இன்மையால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களை ஒடுக்குவதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன், தமிழினத்தை அழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் காரணமாகவே இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

வடக்கு கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர். வடக்கு கடற்பரப்பு பாரிய வளச் சுரண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு தென்னிலங்கை ஆட்சியாளர் பொறுப்புக்கூற வேண்டும்.

இலங்கையில் சகல மக்களும் இன, மத மற்றும் மொழி ரீதியாக சமத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு பொருளாதார கொள்கையினூடாக பயணிக்காவிட்டால் இன்னும் 50 வருடங்கள் கடந்தாலும் இலங்கை இவ்வாறே இருக்கும்.‘‘ என்றார்.

‘‘கடந்த 15 ஆம் திகதி மன்னாரில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அவ்வாறான கொடூரச் செயலில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1998ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத்தில் இதேபோன்று பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பத்தப்பட்ட போது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தியில், கொடூரச் செயலில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழர் தாயகத்தில் சிறுவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு காணப்பட்டது.‘‘ என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்..