ரணிலுக்கு கட்சியே இல்லை! எந்த சின்னத்தில் போட்டியிடுவார்: வசந்த சமரசிங்க

OruvanOruvan

Ranil Wickremesinghe

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியே இல்லாத நிலையில், எந்தக் கட்சியில் தேர்தல் போட்டியிடப்போகின்றார் என்று வசந்த சமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பின் போது குறித்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. தற்போது செல்வாக்கும் இழந்து விட்டது.

கடந்த பொதுதேர்தலில் தேசிய பட்டியல் மூலமே அந்த கட்சிக்கு ஆசனம் கிடைத்தது. அந்த ஆசனத்திலேயே ரணில் நாடாளுமன்றத்திற்கு வந்து ஜனாதிபதியாகவும் பதவி ஏற்றுள்ளார்.

ஆனாலும், ஐ.தே.கா முற்றாக சிதைந்து போன கட்சி. ஒரு சிலர் மட்டுமே அதன் பேரால் அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஐ.தே.க.வுக்கு அரசியல் ரீதியாக பலம் பொருந்திய தலைவர்களும் இல்லை, மக்கள் செல்வாக்கும் இல்லை.

எதிர்வரும் தேர்தல்களில் அந்தக் கட்சியை முன்னிறுத்தி போட்டியிட்டாலும் இதே நிலைதான். அதில் மாற்றம் இருக்காது.

அப்படியான நிலையில் வரப்போகும் தேர்தல்களில ்ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதாயின் எந்தக் கட்சியில் போட்டியிடுவார்? என்றும் வசந்த சமரசிங்க ஐயமொன்றை எழுப்பியுள்ளார்.