அனைவருக்கும் பிடித்த பரோட்டா உருவானது எப்படி?: வரலாறு முக்கியம்!
அனைவராலும் பெரிதும் விரும்பி உண்ணப்படும் உணவில் பரோட்டாவும் ஒன்று. உணவு என்பதைத் தாண்டி நம் வாழ்வியலோடு கலந்த ஒரு உணவாக மாறிவிட்டது.
இந்தியா, பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், நேபாளம், இந்தோனிஷியா ஆகிய நாடுகளில் பரோட்டா முதலிடத்தில் உள்ளது.
பரோட்டா, கொத்துப் பரோட்டா, ஆலூ பரோட்டா, பொரித்த பரோட்டா, மெலிதான வீச்சு பரோட்டா, மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, கோலிஃப்ளவர் பரோட்டா என்று பலவிதமான பரோட்டாக்கள் செய்யப்படுகின்றன.
பரோட்டாவின் வரலாறு
இலங்கை தான் பரோட்டாவின் தாயகம் என கூறப்பட்டாலும் வட இந்தியாவின் 'பராத்தா'வில் இருந்துதான் பரோட்டா உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
சமஸ்கிருத வார்த்தையான 'பரோதா' அதாவது, 'தட்டையான ரொட்டி' என்ற சொல்லிலிருந்துதான் பரோட்டா எனும் சொல் உருவானது.
இது வரலாற்று ரீதியாக இறைச்சி அல்லது பருப்புடன் உண்ணப்படுகிறது.
உலகப்போரும் பரோட்டாவும்
ஆரம்பத்தில் நெய் சேர்த்து, கோதுமை மாவில்தான் பரோட்டா தயாரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது கோதுமைக்கு ஏற்பட்ட தட்டுப்பாடினால், கோதுமைக்கு மாற்றாக மைதா மா பயன்படுத்தப்பட்டதோடு நெய்க்கு பதிலாக எண்ணெய் பயன்படுத்தப்பட்டது.
மைதா மாவானது மிகவும் மெதுவாக ஜீரணிப்பதாலும் நீண்ட நேரம் பசியைத் தாங்கக்கூடியதாகவும் இருப்பதால் இது போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
காலப்போக்கில் பரோட்டா அனைவரினதும் விருப்பமான ஒரு உணவுப்பொருளாக மாறிவிட்டது.