கர்ப்பிணிப் பெண்கள் விரும்பும் 'தண்ணீர்தொட்டி பிரசவம்': எவ்வாறு இருக்கும்?
கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் விரும்புவது சுகப்பிரசவம்தான். ஆனால், தற்போது சுகப்பிரசவத்தை பார்ப்பதே அரிதான ஒரு விடயமாகிவிட்டது.
அதற்குக் காரணம், ஒன்று தாய்க்கு உண்டான உடல் நலப் பிரச்சினையாக இருக்கலாம். அப்படி இல்லையெனில், பிரசவ வலி மீதிருக்கும் பயமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த பயத்துக்கெல்லாம் தீர்வாக அமைவது 'தண்ணீர் தொட்டி பிரசவம்'. ஆங்கிலத்தில் இதை (Water birth) என்று கூறுவார்கள்.
தண்ணீர் தொட்டி பிரசவம் என்றால் என்ன?
ஒரு மருத்துவமனையிலோ அல்லது குழந்தை பிறக்கும் மையத்திலோ வெதுவெதுப்பான தண்ணீர் நிரம்பிய ஒரு தண்ணீர் தொட்டியில் பிரசவம் நடைபெறும்.
இந்த வெதுவெதுப்பான நீரானது, தாய்க்கு ஆறுதலாகவும் மிதக்கும் திறன் மற்றும் ஹைட்ரோஸ்டாடிக் அழுத்தத்தைத் தரக்கூடிய குஷன் போலவும் செயல்படும்.
இது பிரசவத்தின் முதல்கட்ட நிலைக்கு சிறப்பானதாக அமையும்.
தற்போது உலகளவில் தண்ணீர் தொட்டி பிரசவத்தை பல பெண்களும் விரும்புகின்றனர். அதற்குக் காரணம், பிரசவத்தின்போது வெதுவெதுப்பான நீரை ஒத்தடம் கொடுப்பதனால் பிரசவ வலி, ஓரளவு குறைக்கப்பட்டு இயற்கையான முறையில் குழந்தை பிறக்கும்.
இந்த தண்ணீர் தொட்டி பிரசவ முறையானது 'வாட்டர் பெர்த்' என்று வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த பிரசவ முறையானது பெண்களுக்கு வலியில்லா சௌகரியமான பிரசவ முறையாக அமைகிறது.
ஆனால், தண்ணீர்தொட்டி பிரசவத்தை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.
யாரெல்லாம் தண்ணீர்தொட்டி பிரசவத்தை தெரிவு செய்யலாம்?
பிரசவத்தின்போது குறைவான அபாயங்கள் கொண்ட கர்ப்பிணிகள் மட்டுமே இந்த தண்ணீர்தொட்டி பிரசவத்தை தெரிவு செய்யலாம். அதாவது, குழந்தை 37 முதல் 41 வாரங்கள் வரையில் இருக்க வேண்டும். தேவையான அளவு பனிக்குட நீர் இருக்கவேண்டும்.
தொப்புள்கொடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இரத்தக்கசிவு, தொற்றுக்கள் போன்ற மருத்துவ சிக்கல் கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு இந்த தண்ணீர்தொட்டி பிரசவ முறை ஏற்றதல்ல.
இதற்கு முன் குறைபிரசவம், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்தவர்கள் போன்றோர் இந்த முறையை தெரிவு செய்யக்கூடாது.
தண்ணீர்தொட்டி பிரசவ முறையின் நன்மைகள்
பிரசவ நேரம் குறைவடைதல்
வலி குறைந்த திருப்தியான பிரசவ அனுபவம்
நீருக்குள் அதிக நேரம் இருப்பதால் பிறப்புருப்பில் தொற்றுக்கள் ஏற்படாது.
சவால்கள்
பிறக்கும் குழந்தையை சரியாகக் கையாளாவிட்டால் அது குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும்.
தாயின் உடல்வெப்பநிலைக்கு ஏற்றவாறு தண்ணீரின் வெப்பநிலையை பராமரிக்க வேண்டும்.
தாய் நீரில் மூழ்கும்போது நீர்ச்சத்து இழப்பு, அதிகமான வெப்பம் என்பவையும் சிக்கலை ஏற்படுத்தும்.