காதல் திருமணத்துக்கு உங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க வேண்டுமா?: அப்போ இதையெல்லாம் முயற்சி பண்ணுங்க
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறுகிறார்கள். உண்மையில் சொர்க்கம் என்றால் என்ன? அது காதலித்தவர்களையே கரம்பிடிப்பதில் தான் இருக்கிறது.
ஆனால், பலரது காதல், திருமணம் வரை செல்வதில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெற்றோரின் சம்மதம் கிடைக்காமல் இருப்பது.
தமது காதலை எப்படியாவது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் அதற்கு என்னென்ன விடயங்களை செய்கிறார்கள் என்பதில்தான் அனைத்தும் இருக்கின்றது.
அந்த வகையில் காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்றுக்கொள்ள என்னென்ன செய்யவேண்டும் எனப் பார்ப்போம்.
ஒருவரையாவது சமாதானப்படுத்துங்கள்
உங்கள் வீட்டில் திருமணப் பேச்சை ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், உங்கள் பெற்றோரில் தாய் அல்லது தந்தை என யாருடன் நீங்கள் வலுவான பிணைப்பைக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களிடம் உங்கள் காதலைப் பற்றி கூறி வைக்கலாம்.
உங்கள் தாய், தந்தை இருவரையும் சம்மதிக்க வைக்க முடியாமல் போகும்பட்சத்தில் இருவரில் ஒருவரையாவது உங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கலாம்.
துணையை அறிமுகப்படுத்தலாம்
வீட்டினருக்கு உங்கள் காதலியையோ அல்லது காதலனையோ அறிமுகப்படுத்தும்போது, நிதானமாகவும் எளிமையாகவும் இருங்கள். எதற்காகவும் பொய் கூறிவிட வேண்டாம். பின்னர் அது தெரிய வந்தால் உங்கள் திருமண வாழ்க்கைக்கு அதுவே பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.
பெற்றோருடன் சுமுகமான உறவு
சில பிள்ளைகள் பல காரணங்களினால் தமது பெற்றோருடன் ஒரு இடைவெளியை வளர்த்துக் கொள்வார்கள். ஆனால், உங்கள் காதலுக்கு பெற்றோரை சம்மதிக்க வைக்கவேண்டுமென்றால், நீங்கள் அவர்களுடன் நிச்சயம் நல்லதொரு உறவை பேண வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது மனதில் என்ன இருக்கிறதென்று உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
உறவினர்களை அழைத்து வருதல்
உங்கள் வீட்டிலுள்ள தாத்தா, பாட்டி, மாமா, மாமி என யாராவது காதலுக்கு ஆதரவாக இருந்தால் அவர்களை உங்களுக்கு ஆதரவாக அழைத்துக் கொள்ளலாம். இவர்களால் உங்கள் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியும்.
திருமண உரையாடல்
உங்கள் பெற்றோரிடம் மெதுவாக பேச்சு கொடுத்து அவர்கள் எப்படிப்பட்ட மருமகளை அல்லது மருமகனை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் காதலியையோ அல்லது காதலனையோ அறிமுகப்படுத்தும்போது உங்களுக்கு உதவியாக இருக்கும்.