ஓவன் தேவை இல்லை! இனி வீட்டிலேயே சுவையான டீக்கடை பன் செய்யலாம்: 25 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான டீக்கடை பன் தயாராக இருக்கும்.
டீக்கடைகளில் விற்கப்படும் பன்களை ஓவன் இல்லாமல் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டிலேயே செய்யலாம்.
ஓவன் இல்லாமல் எப்படி சுவையான பன் செய்வது என்று இனி விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா- 1/2 கிலோ
சர்க்கரை- ஒரு தேக்கரண்டி
உப்பு- ஒரு சிட்டிகை
முட்டை- 1
பால்-200 கிராம்
ஈஸ்ட்- 1/2 தேக்கரண்டி
வெண்ணெய்- 2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முதலில் ஈஸ்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு முட்டைடை அதனுடன் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.
இந்த கலவையுடன் பால் சேர்க்க வேண்டும்.
இதில் மாவு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பால் விட்டு பிசைந்து அரைமணிநேரம் மூடிபோட்டு ஊற வைக்க வேண்டும்.
அரைமணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் பிசைந்து வைத்த மாவுக்கலவை உப்பலாக இருக்கும்.
இந்த மாவுக்கலவையை மீண்டும் ஒருமுறை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவு உருண்டைகளை ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் வரிசையாக இடைவெளி விட்டு அடுக்கிக்கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு அடி கனமாக பாத்திரம் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பன் உருண்டைகளை எடுத்து அதனுள் வைத்து ஆவி வெளியே போகாத அளவுக்கு 25 நிமிடம் மூடிபோட்டு மூட வேண்டும்.
25 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான டீக்கடை பன் தயாராக இருக்கும்.