கோவையில் வாகன பேரணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி: ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படு வருகின்றன.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இந்திய பிரதமர் இன்று (18) தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கோவையில் வாகன பேரணியில் ஈடுபட்டதையடுத்து பிரதமர் மோடி சாய்பாபாகாலனி நோக்கி புறப்பட்டார்.
பிரதமர் மோடி பயணிக்கும் அதேவாகனத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகனும் பயணிக்கின்றனர்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நாடளாவிய ரீதியில் ஏப்ரல் மாதம் 19 திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கெண்ணும் பணிகள் ஜூன் மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன்
அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் திகதி அறிவிக்கப்படும் முன்பே இந்தியப் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு பல தடவைகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.