சிஏஏ சட்டம் மீளப்பெறப்படாது: இந்தியா இறையாண்மை கொண்ட நாடு, எவரும் இதில் தலையிட முடியாது - அமித் ஷா

OruvanOruvan

இந்திய அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் இந்தச் சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன.

இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத குடியேற்றவாசிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை சிஏஏ (CAA) நோக்கமாகக் கொண்டுள்ளது.

மீளப் பெறப்பட மாட்டாது

ஆனால், குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது எனவும் இச்சட்டம் கூறுகிறது.

இந்தச் சட்டம் அநீதியானது என்றும் இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சியினரும், முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஒருபோது மீளப் பெறப்பட மாட்டாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பாஜக தலைமையிலான அரசாங்கம் எந்த சமரசமும் செய்துக்கொள்ள தயார் இல்லை என்றும் அவர் கூறியு்ளளார்.

எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை

"எங்கள் நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வதற்கான எங்கள் இறையாண்மை உரிமை இது. அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்.

பாஜகவோ, பிரதமர் மோடியோ சொல்வதெல்லாம் கல்லில் செதுக்கப்பட்டதைப் போன்றது. ஒவ்வொரு உத்தரவாதமும் மோடியால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. ஒன்றை சொல்லி இன்னொன்றைச் செய்த வரலாறு அவர்களுக்கு உண்டு. ஆகவே, சிஏஏ வை ரத்து செய்வது சாத்தியமில்லை. திரும்பப் பெறவும் மாட்டாது." என்றும் அமித் ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய சட்டத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சியால் புதிய வாக்கு வங்கி உருவாக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.