இந்தியாவின் நீருக்கடியிலான முதலாவது மெட்ரோ சேவை இன்று ஆரம்பம்: உட்கட்டமைப்பு மேம்பாட்டில் புதிய மைல்கல்

OruvanOruvan

India's First Underwater Metro

இந்தியாவின் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மெட்ரோ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (மார்ச் 6) கொல்கத்தாவில் திறந்து வைக்கிறார்.

கொல்கத்தாவின் ஹூக்ளி (Hooghly) ஆற்றின் அடியில் 16.6 கிலோமீட்டர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதையானது பொறியியலின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

நீருக்கடியிலான மெட்ரோ சுரங்கப்பாதை கொல்கத்தாவின் இரட்டை நகரங்களான ஹவுரா மற்றும் சால்ட் லேக்கை இணைக்கும்.

மேலும் ஆறு ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அவற்றில் மூன்று நிலத்தடி ரயில் நிலையங்கள் ஆகும்.

இன்றைய தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

இதில் பல உயரதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொள்வார்கள் என்றும் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் பயண அனுபவத்தினை பயணிகள் இன்று முதல் அனுபவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிது.

OruvanOruvan

India's First Underwater Metro

இந்தத் திட்டத்தின் சிறப்பு என்ன? தொடக்க நிகழ்வைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் சில:

  • கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம் - எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவில் இந்தியாவில் எந்தவொரு பெரிய ஆற்றின் கீழும் இல்லாத வகையில் முதல் போக்குவரத்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

  • ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் பகுதி ரயில் பயணம் ஹூக்ளி ஆற்றின் கீழ் செல்கிறது. ஹவுரா மற்றும் சால்ட் லேக் நகரம் இந்த ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்கு கரையில் அமைந்துள்ளது.

  • 2023 ஏப்ரலில் கொல்கத்தா மெட்ரோ சோதனையின் ஒரு பகுதியாக ஹூக்ளி ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை வழியாக ரயிலை இயக்கி வரலாறு படைத்தது, இது இந்தியாவில் முதல் முறையாகும்.

  • ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பாதை நாட்டின் ஆற்றின் அடியில் முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சுரங்கப்பாதை ஆகும்.

  • ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு இந்த வழித்தட பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. 45 வினாடிகளில் இந்த பாதையை மெட்ரோ ரயில் கடந்து செல்லும்.

  • எஸ்பிளனேட் மற்றும் சீல்டா இடையே கிழக்கு-மேற்கு சீரமைப்பின் பகுதி இன்னும் கட்டுமானத்தில் உள்ளது. இருப்பினும், சால்ட் லேக் செக்டார் V முதல் சீல்டா பகுதி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

  • மெட்ரோ தானியங்கி ரயில் இயக்கம் (ATO) என்ற அமைப்பைப் பயன்படுத்துகிறது. அதாவது மோட்டார் இயக்குநர் ஒரு பொத்தானை அழுத்திய பிறகு ரயில் தானாகவே அடுத்த நிலையத்திற்கு நகரும்.

  • கிழக்கு-மேற்கு மெட்ரோவின் மொத்த 16.6 கிலோ மீட்டர்களில், ஹூக்ளி ஆற்றின் கீழ் உள்ள சுரங்கப்பாதை உட்பட 10.8 கிலோமீட்டர்கள் நிலத்தடியில் உள்ளன. மீதமுள்ளவை நிலத்திற்கு மேல் உள்ளது.

  • சால்ட் லேக் செக்டார் V மற்றும் ஹவுரா மைதானம் இடையே ஜூன் அல்லது ஜூலையில் முழு கிழக்கு-மேற்கு பாதைக்கான வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதை கொல்கத்தா மெட்ரோ நோக்கமாகக் கொண்டுள்ளது.