இன்னும் இரு நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளார் சாந்தன்: உத்தரவு நகலை வழங்கியது மத்திய அரசு
இந்திய மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் எனவும் விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சாந்தன் தற்போது திருச்சி மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது. இந்நிலையிலே இரண்டு நாட்களில் அவர் இலங்கை வருவார் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.
இதனடிப்படையிலேயே, இந்திய மத்திய அரசு சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.