மசூதி இடிப்பால் உத்தரகாண்டில் வெடித்தது வன்முறை: நால்வர் பலி, 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் காயம்

OruvanOruvan

Haldwani violence

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பாக வெடித்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

மேலும், 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர்.

இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைதியின்மையால், மாவட்ட நிர்வாகம் இணையதள சேவையை நிறுத்தி, அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை மூட வழியை ஏற்படுத்தியது.

அதேநேரம் வன்முறையாளர்களுக்கு எதிராக துப்பாக்கி சூடு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

உத்தராகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மசூதி மற்றும் மதரஸாவை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பொலிஸாருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கற்கல் வீசப்பட்டும், கார்கள் எரிக்கப்பட்டும், பொலிஸ் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டும் வன்முறை வெடித்தது.

அங்குள்ள பன்பூல்புரா பகுதியில் சுமார் 2 கி.மீ பரப்பிலான ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வரும் இஸ்லாமிய மக்களை அங்கிருந்து வெளியேற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து போராடிய மக்கள், சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற உள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் அவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றியதாக தெரிகிறது.

குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாத அரசாங்கத்தின் கீழ் தாங்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டதாக முஸ்லிம் குழுக்கள் கூறுகின்றன.

மேலும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக மத சார்பு நடவடிக்கை என்று குற்றம் சாட்டுகின்றன. இந்த குற்றச்சாட்டை அரசு மறுக்கிறது.