ஒரே ஒரு பென்சிலால் இத்தனை வார்த்தைகள் எழுத முடியுமா?: சுவாரஸ்யமான உண்மைகள்
வருடா வருடம் மார்ச் மாதம் 30ஆம் திகதி தேசிய பென்சில் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தை பருவத்தில் சேகரித்த ஞாபக சின்னங்களில் பென்சிலும் ஒன்று.
பென்சிலில் எழுதும் போது தான் எமது பிழையை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது.
வளர்ந்ததும் பேனாவில்தான் எழுதியாக வேண்டும். அப்பொழுது தவறு செய்தால் தெளிவாகத் தெரியும்.
பள்ளிப்பருவம் முடிந்ததும் பென்சில் தேவைப்படுவதில்லை. ஏன் அதைப்பற்றி இன்று நாம் நினைப்பது கூட இல்லை.
பென்சிலின் வரலாறு
500 வருடங்களுக்கு முன்பே கிராபைட் கண்டுபிடிக்கப்பட்டாலும், 200 வருடங்களுக்கு முன்பு தான் பென்சில் உருவாக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் ஃபேபர் குடும்பம் பென்சில் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களின் முயற்சி வெற்றியடையவில்லை. பிறகு 1795இல் N.J. Conde என்பவர் பென்சிலை உருவாக்கினார்.
உலர்ந்த கிராபைட்டுடன், களிமண் மற்றும் நீரைச் சேர்த்து காயவைத்து பின்னர் பென்சிலின் நடுப்பகுதியில் உள்ள கருமைப்பகுதியை உருவாக்கினார்.
இவரின் பென்சில்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.
இவர் பயன்படுத்திய முறையே இன்றளவும் பென்சில் தயாரிப்புக்கு அடிப்படையாக அமைகின்றது என்றால் உங்களினால் நம்ப முடிகின்றதா?
கடந்த 1858 இல் ஹைமேன் லிப்மான் ( Hymen Lipman) பென்சிலின் அடியில் அழிப்பானை இணைத்தார்.
ஒரு மர பென்சிலில் கிராபைட் நான்கில் மூன்று பங்கும், அழிப்பான் ( Eraser) நான்கில் ஒருபங்கும் சேர்த்து உருவாக்கினார்.
அன்றிலிருந்து மர பென்சிலின் ஒரு பக்கம் எழுதுவதற்கும், மற்றொரு பகுதி அழிப்பதற்கும் பயன்பட்டது.
இவர் உருவாக்கிய பென்சிலின் புதிய வடிவமைப்பை கௌரவிக்கும் விதமாகவே வருடாவருடம் மார்ச் மாதம் 30ம் திகதி தேசிய பென்சில் தினம் கொண்டாடப்படுகிறது.
பென்சில் குறித்த சுவாரஸ்யமான உண்மை
ஒரே ஒரு மர பென்சிலால் 45,000 வார்த்தைகளை எழுத முடியும்.
70 மைல் தூரம் வரை கோடு வரைய முடியும்.
பென்சிலால் நீரின் அடியிலும், ஜீரோ ஈர்ப்பு சக்தியுள்ள விண்வெளியிலும் எழுத முடியும்.
ஒரு நல்ல அளவுள்ள மரத்தினால் கிட்டத்தட்ட 3,00,000 பென்சில்களை உருவாக்க முடியும்.